This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Urdu
Cyrillic/Russian
பொன்வண்ணத்தந்தாதி
11.006 பொன்வண்ணத்தந்தாதி (கோயில் (சிதம்பரம்) )
Back to Top
சேரமான் பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி
11.006  
பொன்வண்ணத்தந்தாதி பண் - (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே. [1]
ஈசனைக் காணப் பலிகொடு செல்லஎற் றேஇவளோர் பேயனைக் காமுறு பிச்சிகொ லாமென்று பேதையர்முன் தாயெனை ஈர்ப்பத் தமியேன் தளர அத் தாழ்சடையோன் வாவெனைப் புல்லவென்றான்இமை விண்டன வாட்கண்களே. [2]
கண்களங் கஞ்செய்யக் கைவளை சோரக் கலையுஞ்செல்ல ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண் கொன்றையந் தார்உருவப் பெண்களங் கம் இவள் பேதுறும் என்பதோர் பேதைநெஞ்சம் பண்களங் கம்இசை பாடநின் றாடும் பரமனையே. [3]
பரமனை யே பலி தேர்ந்துநஞ் சுண்டது பன்மலர்சேர் பிரமனை யே சிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம் சரமனை யேயுடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம் வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே. [4]
தவனே உலகுக்குத் தானே முதல் தான் படைத்தவெல்லாம் சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சம்உண்ட பவனே எனச்சொல்லு வாரும் பெறுவரிப் பாரிடமே. [5]
இடம்மால் வலந்தான் இடப்பால் துழாய்வலப் பாலொண்கொன்றை வடமால் இடந்துகில் தோல்வலம் ஆழி இடம்வலம்மான் இடமால் கரிதால் வலஞ்சே திவனுக் கெழில்நலஞ்சேர் குடமால் இடம்வலங் கொக்கரை யாம்எங்கள் கூத்தனுக்கே. [6]
கூத்துக் கொலாமிவர் ஆடித் திரிவது கோல்வளைகள் பாத்துக் கொலாம்பலி தேர்வது மேனி பவளங்கொலாம் ஏத்துக் கொலாமிவர் ஆதரிக் கின்ற திமையவர்தம் ஓத்துக் கொலாமிவர் கண்ட திண் டைச்சடை உத்தமரே. [7]
உத்தம ராயடி யாருல காளத் தமக்குரிய மத்தம் அராமதி மாடம் பதிநலஞ் சீர்மைகுன்றா எத்தம ராயும் பணிகொள வல்ல இறைவர்வந்தென் சித்தம ராயக லாதுடன் ஆடித் திரிதவரே. [8]
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின் உள்ளுந் திரிதரினும் அரிதவர் தன்மை அறிவிப்ப தாயினும் ஆழிநஞ்சேய் கரிதவர் கண்டம் வெளிதவர் சாந்தம்கண் மூன்றொடொன்றாம் பரிதவர் தாமே அருள்செய்து கொள்வர்தம் பல்பணியே. [9]
பணிபதம் பாடிசை ஆடிசை யாகப் பனிமலரால் அணிபதங் கன்பற் கொள்அப்பனை அத்தவற் கேயடிமை துணிபதங் காமுறு தோலொடு நீறுடல் தூர்த்துநல்ல தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம் நீயென் தனிநெஞ்சமே. [10]
நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம்மலர அஞ்செங் கரதலங் கூம்பஅட் டாங்கம் அடிபணிந்து தஞ்சொல் மலரால் அணியவல் லோர்கட்குத் தாழ்சடையான் வஞ்சங் கடிந்து திருத்திவைத் தான்பெரு வானகமே. [11]
வானகம் ஆண்டு மந் தாகினி ஆடிநந் தாவனஞ்சூழ் தேனக மாமலர் சூடிச்செல் வோருஞ் சிதவல்சுற்றிக் கானகந் தேயத் திரிந்திரப் போருங் கனகவண்ணப் பால்நிற நீற்றற் கடியரும் அல்லாப் படிறருமே. [12]
படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச்சென் றிடறா தொழிதும் எழு நெஞ்ச மேயெரி ஆடியெம்மான் கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய் உடல்தான் உளபயன் ஆவசொன் னேனிவ் வுலகினுள்ளே. [13]
உலகா ளுறுவீர் தொழுமின்விண் ணாள்வீர் பணிமின்நித்தம் பலகா முறுவீர் நினைமின் பரமனொ டொன்றலுற்றீர் நலகா மலரால் அருச்சிமின் நாள்நர கத்துநிற்கும் அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே. [14]
அலையார் புனலனல் ஞாயி றவனி மதியம்விண்கால் தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோ தலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கனென்னே கலையான் ஒருவிரல் தாங்ககில் லான்விட்ட காரணமே. [15]
காரணன் காமரம் பாடவோர் காமர்அம் பூடுறத்தன் தாரணங் காகத் தளர்கின்ற தையலைத் தாங்குவார்யார் போரணி வேற்கண் புனற்படம் போர்த்தன பூஞ்சுணங்கார் ஏரணி கொங்கையும் பொற்படம் மூடி இருந்தனவே. [16]
இருந்தனம் எய்தியும் நின்றுந் திரிந்துங் கிடந்தலைந்தும் வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு போகநெஞ் சேமடவாள் பொருந்திய பாகத்துப் புண்ணியன் புண்ணியல் சூலத்தெம்மான் திருந்திய போதவன் றானே களையுநம் தீவினையே. [17]
தீவினை யேனைநின் றைவர் இராப்பகல் செத்தித்தின்ன மேவின வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட் டேன்வினையும் ஒவின துள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந்தடைந்தேன் பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே. [18]
பாதம் புவனி சுடர்நய னம்பவ னமுயிர்ப் போங் கோதம் உடுக்கை உயர்வான் முடிவிசும் பேயுடம்பு வேதம் முகம் திசை தோள் மிகு பன்மொழி கீதமென்ன போதம் இவற்கோர் மணிநிறந் தோற்பது பூங்கொடியே. [19]
கொடிமேல் இடபமுங் கோவணக் கீளுமோர் கொக்கிறகும் அடிமேற் கழலும் அகலத்தின் நீறும்ஐ வாய்அரவும் முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப் போதும் வருகின்றவே. [20]
வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்வை கற்குவைகல் பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில் லேன்பொடி பூசிவந்துன் அருகொன்றி நிற்க அருளுகண் டாய்அழல் வாய்அரவம் வெருகொன்ற வெண்மதி செஞ்சடை மேல்வைத்த வேதியனே. [21]
வேதியன் பாதம் பணிந்தேன் பணிந்துமெய்ஞ் ஞானமென்னும் சோதியென் பால்கொள்ள உற்றுநின் றேற்கின்று தொட்டிதுதான் நீதியென் றான் செல்வம் ஆவதென் றேன் மேல் நினைப்பு வண்டேர் ஒதிநின் போல்வகைத் தேயிரு பாலும் ஒழித்ததுவே. [22]
ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன் அறுபகை ஒங்கிற்றுள்ளம் இழித்தேன் உடம்பினை ஏலேன் பிறரிடை இம்மனையும் பழித்தேன் பழியே விளைக்கும்பஞ் சேந்தியக் குஞ்சரமும் தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன் இனிமிகத் தெள்ளியனே. [23]
தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன் தீங்கவி பாடலுற்றேன் ஒள்ளிய சொல்லும் பொருளும் பெறேன்உரைத் தாருரைத்த கள்ளிய புக்காற் கவிகளொட் டார் கடல் நஞ்சயின்றாய் கொள்ளிய வல்லகண் டாய் புன்சொல் ஆயினுங் கொண்டருளே. [24]
அருளால் வருநஞ்சம் உண்டுநின் றாயை அமரர்குழாம் பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்கள் புணர்க்கலுற்றேன் இருளா சறவெழில் மாமதி தோன்றவும் ஏன்றதென்ன வெருளா தெதிர்சென்று மின்மினி தானும் விரிகின்றதே. [25]
விரிகின்ற ஞாயிறு போன்ற மேனியஞ் ஞாயிறுசூழ்ந் தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை அச்சடைக்கீழ்ச் சரிகின்ற காரிருள் போன்றது கண்டம் காரிருட்கீழ்ப் புரிகின்ற வெண்முகில் போன்றுள தாலெந்தை ஒண்பொடியே. [26]
பொடிக்கின் றிலமுலை போந்தில பல்சொற் பொருள்தெரியா முடிக்கின் றிலகுழல் ஆயினும் கேண்மின்கள் மூரிவெள்ளம் குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங் கண்டன்மெய்க் கொண்டணிந்த கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி யேன்பிறர் கட்டுரையே. [27]
உரைவளர் நான்மறை ஓதி உலகம் எலாந் திரியும் விரைவளர் கொன்றை மருவிய மார்பன் விரிசடைமேல் திரைவளர் கங்கை நுரைவளர் தீர்த்தம் செறியச்செய்த கரைவளர் வொத்துள தால்சிர மாலையெம் கண்டனுக்கே. [28]
கண்டங் கரியன் கரிஈர் உரியன் விரிதருசீர் அண்டங் கடந்த பெருமான் சிறுமான் தரித்தபிரான் பண்டன் பரம சிவனோர் பிரமன் சிரமரிந்த புண்தங் கயிலன் பயிலார மார்பனெம் புண்ணியனே. [29]
புண்ணியன் புண்ணியல் வேலையன் வேலைய நஞ்சனங்கக் கண்ணியன் கண்ணியல் நெற்றியன் காரணன் காரியங்கும் விண்ணியன் விண்ணியல் பாணியன் பாணி கொளவுமையாள் பண்ணியன் பண்ணியல் பாடல நாடற் பசுபதியே. [30]
பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர் கதியார் விடைஉண்டு கண்மூன் றுளகறைக் கண்டமுண்டு கொதியார் மழுவுண்டு கொக்கரை உண் டிறை கூத்துமுண்டு மதியார் சடையுள மாலுள தீவது மங்கையர்க்கே. [31]
மங்கைகொங் கைத்தடத் திங்குமக் குங்குமப் பங்கநுங்கி அங்கமெங் குந்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான் கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்ணர வங்கள்பொங்கிப் பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே. [32]
பண்டங்கன் வந்து பலிதாவென் றான்பக லோற்கிடென்றேன் அண்டங் கடந்தவன் அன்னமென் றான்அயன் ஊர்தியென்றேன் கொண்டிங் குன்னையம்பெய் என்றான் கொடித்தேர் அனங்கனென்றேன் உண்டிற் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே. [33]
உற்றடி யாருல காளவோர் ஊணும் உறக்குமின்றிப் பெற்றம தாவதென் றேறும் பிரான் பெரு வேல்நெடுங்கண் சிற்றடி யாய்வெண்பற் செவ்வாய் இவள்சிர மாலைக்கென்றும் இற்றிடை யாம்படி யாகவென் னுக்கு மெலிக்கின்றதே. [34]
மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு தலிக்கின்ற காமங் கரதலம் மெல்லி துறக்கம்வெங்கூற் றொலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்க பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே. [35]
பல்லுயிர் பாகம் உடல் தலை தோல்பக லோன்மறல்பெண் வில்லியோர் வேதியன் வேழம் நிரையே பறித்துதைத்துப் புல்லியுஞ் சுட்டும் அறுத்தும் உரித்துங்கொண் டான்புகழே சொல்லியும் பாடியும் ஏத்தக் கெடும்நங்கள் சூழ்துயரே. [36]
துயருந் தொழுமழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப் பெயரும் பிதற்றும் நகும்வெய் துயிர்க்கும் பெரும்பணிகூர்ந் தயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்குமந்தோ இங்ஙனே மயரும் மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே. [37]
வாணுதற் கெண்ணம்நன் றன்று வளர்சடை எந்தைவந்தால் நாணுதற் கெண்ணாள் பலிகொடு சென்று நகும்நயந்து பேணுதற் கெண்ணும் பிரமன் திருமால் அவர்க்கரிய தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே. [38]
தாழுஞ் சடைசடை மேலது கங்கைஅக் கங்கைநங்கை வாழுஞ் சடைசடை மேலது திங்களத் திங்கட்பிள்ளை போழுஞ் சடை சடை மேலது பொங்கர வவ்வரவம் வாழுஞ் சடைசடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே. [39]
முனியே முருகலர் கொன்றையி னாயென்னை மூப்பொழித்த கனியே கழலடி அல்லாற் களைகண்மற் றொன்றுமிலேன் இனியேல் இருந்தவஞ் செய்யேன் திருந்தவஞ் சேநினைந்து தனியேன் படுகின்ற சங்கடம் ஆர்க்கினிச் சாற்றுவனே. [40]
சாற்றுவன் கோயில் தலையும் மனமுந் தவம்இவற்றால் ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந் தாற்றியஞ் சொல்மலரால் ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத் தானென் றெழுந்தலரே தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே. [41]
சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண் திணிந்த கல்லாம் நினையா மனம் வணங் காத்தலை யும்பொறையும் அல்லா அவயவந் தானும் மனிதர்க் கசேதனமே. [42]
தனக்குன்றம் மாவையம் சங்கரன் தன்னருள் அன்றிப்பெற்றால் மனக்கென்றும் நஞ்சிற் கடையா நினைவன் மதுவிரியும் புனக்கொன்றை யானரு ளாற்புழு வாகிப் பிறந்திடினும் எனக்கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க எண்ணுவனே. [43]
எண்ணம் இறையே பிழைக்குங் கொலாமிமை யோரிறைஞ்சும் தண்ணம் பிறைசடைச் சங்கரன் சங்கக் குழையன்வந்தென் உண்ணன் குறைவ தறிந்தும் ஒளிமா நிறங்கவர்வான் கண்ணும் உறங்கா திராப்பகல் எய்கின்ற காமனுக்கே. [44]
காமனை முன்செற்ற தென்றாள் அவளிவள் காலனென்னும் தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள் நாம்முனஞ் செற்றதன் றாரையென் றேற்கிரு வர்க்குமஞ்சி ஆமெனக் கிற்றிலர் அற்றெனக் கிற்றிலர் அந்தணரே. [45]
அந்தண ராமிவர் ஆரூ ருறைவதென் றேனதுவே சந்தணை தோளியென் றார்தலை யாயசலவர் என்றேன் பந்தணை கையாய் அதுவுமுண் டென்றார் உமையறியக் கொந்தணை தாரீர் உரைமினென் றேன்துடி கொட்டினரே. [46]
கொட்டும் சிலபல சூழநின் ரார்க்கும்குப் புற்றெழுந்து நட்ட மறியும் கிரீடிக்கும் பாடும் நகும்வெருட்டும் வட்டம் வருமருஞ் சாரணை செல்லும் மலர்தயங்கும் புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டான் பூதங்களே. [47]
பூதப் படையுடைப் புண்ணிய ரேபுறஞ்சொற்கள் நும்மேல் ஏதப் படவெழு கின்றன வாலிளை யாளொடும்மைக் காதற் படுப்பான் கணைதொட்ட காமனைக் கண்மலராற் சேதப் படுத்திட்ட காரணம் நீரிறை செப்புமினே. [48]
செப்பன கொங்கைக்குத் தேமலர்க் கொன்றை நிறம்பணித்தான் மைப்புரை கண்ணுக்கு வார்புனற் கங்கைவைத் தான்மனத்துக் கொப்பன இல்லா ஒளிகிளர் உன்மத் தமும்அமைத்தான் அப்பனை அம்மனை நீயென் பெறாதுநின் றார்க்கின்றதே. [49]
ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும்ஐ வாயரவும் ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும்வென்றி பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவுமெல்லாம் கார்க்கொன்றை மாலையி னார்க்குடன் ஆகிக் கலந்தனவே. [50]
கலந்தனக் கென்பலர் கட்டவிழ் வார்கொன்றை கச்சரவார் சலந்தனக் கண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும் நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத்து அலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே. [51]
அழிகின்ற தாருயிர் ஆகின்ற தாகுலம் ஏறிடும்மால் இழிகின்ற சங்கம் இருந்த முலைமேற் கிடந்தனபீர் பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது வாய்கலை போனவந்தார் மொழிகின்ற தென்னினி நான்மறை முக்கண் முறைவனுக்கே. [52]
முறைவனை மூப்புக்கும் நான்மறைக் கும்முதல் ஏழ்கடலந் துறைவனைச் சூழ்கயி லாயச் சிலம்பனைத் தொன்மைகுன்றா இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர் சித்தந் தம்பால் உறைவனைப் பாம்பனை யாம்பின்னை என்சொல்லி ஓதுவதே. [53]
ஓதவன் நாமம் உரையவன் பல்குணம் உன்னைவிட்டேன் போதவன் பின்னே பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று மாதவ மாகிடு மாதவ மாளவர் புன்சடையான் யாதவன் சொன்னான் அதுகொண் டொழியினி ஆரணங்கே. [54]
ஆரணங் கின்முகம் ஐங்கணை யானகம் அவ்வகத்தில் தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்தொன் மைக்கண்வந்த பூரண கும்பம் முலையிவை காணப் புரிசடையெம் காரணன் தாள்தொழும் அன்போ பகையோ கருதியதே. [55]
கருதிய தொன்றில்லை ஆயினுங் கேண்மின்கள் காரிகையாள் ஒருதின மும்உள ளாகவொட் டாதொடுங் காரொடுங்கப் பொருதநன் மால்விடைப் புண்ணியன் பொங்கிளங் கொன்றையின்னே தருதிர்நன் றாயிடும் தாரா விடிற்கொல்லுந் தாழிருளே. [56]
இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமரையால் பொருளால் கமழ்கொன்றை யால்முல்லை புற்றர வாடுதலால் தெருளார் மதிவிசும் பால்பௌவந் தெண்புனல் தாங்குதலால் அருளாற் பலபல வண்ணமு மாஅரன் ஆயினனே. [57]
ஆயின அந்தணர் வாய்மை அரைக்கலை கைவளைகள் போயின வாள்நிகர் கண்ணுறு மைந்நீர் முலையிடையே பாயின வேள்கைக் கரபத் திரத்துக்குச் சூத்திரம்போல் ஆயின பல்சடை யார்க்கன்பு பட்டவெம் ஆயிழைக்கே. [58]
இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்றதுஇற்றால் பிழையாள் நமக்கிவை கட்டுண்க என்பது பேச்சுக்கொலாம் கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள் குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே. [59]
கூடிய தன்னிடத் தானுமை யாளிடத் தானைஐயா றீடிய பல்சடை மேற்றெரி வண்ணம் எனப்பணிமின் பாடிய நான்மறை பாய்ந்து கூற்றைப் படர்புரஞ்சுட் டாடிய நீறுசெஞ் சாந்திவை யாமெம் அயனெனவே. [60]
அயமே பலியிங்கு மாடுள தாணுவோர் குக்கிக்கிடப் பயமே மொழியும் பசுபதி ஏறெம்மைப் பாய்ந்திடுமால் புயமேய் குழலியர் புண்ணியர் போமின் இரத்தல்பொல்லா நயமே மொழியினும் நக்காம மாவும்மை நாணுதுமே. [61]
நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை நாமெழுக ஏணார் இருந்தமி ழார்மற வேனுந் நினைமினென்றும் பூணார் முலையீர் நிருத்தன் புரிசடை எந்தைவந்தால் காணா விடேன்கண் டிரவா தொழியேன் கடிமலரே. [62]
கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரலொட்டேன் முடிமலர் தீண்டின் முனிவன் முலைதொடு மேற்கெடுவன் அடிமலர் வானவர் ஏத்தநின் றாய்க் கழ கல்லவென்பேன் தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு வாணை தொடங்குவனே. [63]
தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே அடங்கிய வேட்கை அரன்பால் இலர்அறு காற்பறவை முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி இங்குமன்றிக் கிடங்கின்றி பட்ட கராவனை யார்பல கேவலரே. [64]
வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே கலந்தான் வலம்நீ றிடம்சாந்து எரிவலம் பந்திடமென்பு அலர்ந்தார் வலமிடம் ஆடகம் வேல்வலம் ஆழியிடம் சலந்தாழ் சடைவலம் தண்ணங் குழலிடம் சங்கரற்கே. [65]
சங்கரன் சங்கக் குழையன் சரணார விந்தந்தன்னை அங்கரங் கூப்பித் தொழுதாட் படுமின் தொண் டீர்நமனார் கிங்கரர் தாம்செய்யும் கீழா யினமிறை கேட்டலுமே இங்கரம் ஆயிரம் ஈரவென் நெஞ்சம் எரிகின்றதே. [66]
எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்கத் தீக்கிமையோர் சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற் சரிகின்ற திங்களோர் தோணியொக் கின்றகத் தோணியுய்ப்பான் தெரிகின்ற திண்கழை போன்றுள தாலத் திறலரவே. [67]
அரவம் உயிர்ப்ப அழலும் அங்கங்கை வளாய்க்குளிரும் குரவங் குழலுமை ஊடற்கு நைந்துரு கும்அடைந்தார் பரவும் புகழண்ணல் தீண்டலும் பார்வா னவைவிளக்கும் விரவும் இடரின்பம் எம்மிறை சூடிய வெண்பிறையே. [68]
பிறைத்துண்டஞ் சூடலுற் றோபிச்சை கொண்டனல் ஆடலுற்றோ மறைக்கண்டம் பாடலுற் றோவென்பும் நீறும் மருவலுற்றோ கறைக்கண்டம் புல்லலுற் றோகடு வாயர வாடலுற்றோ குறைக்கொண் டிவளரன் பின்செல்வ தென்னுக்குக் கூறுமினே. [69]
கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற் றேவல் குளிர்மின்கண்கள் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின்செற்றம் ஆறுமின் வேட்கை அறுமின் அவலம் இவைநெரியா ஏறுமின் வானத் திருமின் விருந்தாய் இமையவர்க்கே. [70]
இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட் டேந்தல்பின்போய் அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த சலமக ளாயணைந்தே எமையா ளுடையான் தலை மகளாவங் கிருப்பவென்னே உமையா ளவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே. [71]
உறைகின் றனரைவர் ஒன்பது வாயிலோர் மூன்றுளவால் மறைகின்ற என்பு நரம்போ டிறைச்சி உதிரம்மச்சை பறைகின்ற தோல்போர் குரம்பை பயனில்லை போயடைமின் அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக் கொண்டோன் மலரடிக்கே. [72]
அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன் ஞாலங் கொடுத்தடிநாய் வடிக்கண்ணி நின்னைத் தொழவளை கொண்டனை வண்டுண்கொன்றைக் கடிக்கண்ணி யாயெமக்கோரூர் இரண்டகங் காட்டினையால் கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே றுயர்த்த குணக்குன்றமே. [73]
குன்றெடுத் தான்செவி கண்வாய் சிரங்கள் நெரிந்தலற அன்றடர்த் தற்றுகச் செற்றவன் அற்றவர்க் கற்றசிவன் மன்றிடைத் தோன்றிய நெல்லிக் கனிநிற்ப மானுடர்போய் ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத் துறுகுழியே. [74]
குழிகண் கொடுநடைக் கூன்பற் கவட்டடி நெட்டிடையூன் உழுவைத் தழைசெவித் தோல்முலைச் சூறை மயிர்ப்பகுவாய்த் தெழிகட் டிரைகுரல் தேம்பல் வயிற்றுத் திருக்குவிரற் கழுதுக் குறைவிடம் போல் கண்டன் ஆடும் கடியரங்கே. [75]
அரம்கா மணியன்றில் தென்றலோர் கூற்றம் மதியம்அந்தீச் சரம்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால் இவள் தளர்ந்தாள் இரங்கா மனத்தவர் இல்லை இரங்கான் இமையவர்தம் சிரம்கா முறுவான் எலும்புகொள் வானென்றன் தேமொழிக்கே. [76]
மொழியக்கண் டான்பழி மூளக்கண் டான்பிணி முன்கைச்சங்கம் அழியக்கண் டானன்றில் ஈரக்கண் டான்தென்றல் என்னுயிர்மேற் கழியக்கண் டான்துயர் கூரக்கண் டான்துகில் சூழ்கலையும் கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத லான்கண்ட கள்ளங்களே. [77]
கள்ள வளாகங் கடிந்தடி மைப்படக் கற்றவர்தம் உள்ள வளாகத் துறுகின்ற உத்தமன் நீள்முடிமேல் வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி வியன்பிறையைக் கொள்ள வளாய்கின்ற பாம்பொன் றுளது குறிக்கொண்மினே. [78]
குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை யேவந்து கோளிழைத்தீர் வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ எலும்போ விரிசடைமேல் உறைக்கொன்றை யோவுடைத் தோலோ பொடியோ உடைகலனோ கறைக்கண்ட ரேநுமக் கென்னோ சிறுமி கடவியதே. [79]
கடவிய தொன்றில்லை ஆயினும் கேண்மின்கள் காரிகையாள் மடவிய வாறுகண் டாம்பிறை வார்சடை எந்தைவந்தாற் கிடவிய நெஞ்சம் இடங்கொடுத் தாட்கவ லங்கொடுத்தான் தடவிய கொம்பதன் தாள்மேல் இருந்து தறிக்குறுமே. [80]
தறித்தாய் அயன்தலை சாய்த்தாய் சலந்தர னைத்தழலாப் பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய் புரம்புன லுஞ்சடைமேற் செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற கண்டிவள் சில்வளையும் பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ லாமென்று பாவிப்பனே. [81]
பாவிக்கும் பண்டையள் அல்லள் பரிசறி யாள்சிறுமி ஆவிக்கும் குற்குலு நாறும் அகம்நெக அங்கமெங்கும் காவிக்கண் சோரும்பொச் சாப்புங் கறைமிடற் றானைக் கண்ணில் தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல் லோதிக்குச் சந்தித்தவே. [82]
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம் பிணிக்குத் தனிமருந்தாம் சிந்திக்கிற் சிந்தா மணியாகித் தித்தித் தமுதமுமாம் வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும் வானோர் வணங்கநின்ற அந்திக்கண் ஆடியி னானடி யார்களுக் காவனவே. [83]
ஆவன யாரே அழிக்கவல் லாரமை யாவுலகில் போவன யாரே பொதியகிற் புராபுரம் மூன்றெரித்த தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது தீவினை யேனிழந் தேன்கலை யோடு செறிவளையே. [84]
செறிவளை யாய்நீ வரையல் குலநலம் கல்விமெய்யாம் இறையவன் தாமரைச் சேவடிப் போதென்றெல் லோருமேத்தும் நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று வேண்டிய நீசர்தம்பால் கறைவளர் கண்டனைக் காணப் பெரிதுங் கலங்கியதே. [85]
கலங்கின மால்கடல் வீழ்ந்தன கார்வரை ஆழ்ந்ததுமண் மலங்கின நாகம் மருண்டன பல்கணம் வானங்கைபோய் இலங்கின மின்னொடு நீண்ட சடைஇமை யோர்அவிந்தார் அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி ஆடுவ தெம்மிறையே. [86]
எம்மிறை வன்னிமை யோர்தலை வன்உமை யாள்கணவன் மும்முறை யாலும் வணங்கப் படுகின்ற முக்கண்நக்கற் கெம்முறை யாளிவள் என்பிழைத் தாட்கிறை என்பிழைத்தான் இம்முறை யாலே கவரக் கருதிற் றெழிற்கலையே. [87]
கலைதலைச் சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடி சிலையிவை ஏந்திய எண்டோட் சிவற்கு மனஞ்சொல்செய்கை நிலைபிழை யாதுகுற் றேவல்செய் தார்நின்ற மேருவென்னும் மலைபிழை யாரென்ப ராலறிந் தோர் இந்த மாநிலத்தே. [88]
மாநிலத் தோர்கட்குத் தேவர் அனையவத் தேவரெல்லாம் ஆநலத் தாற்றொழும் அஞ்சடை ஈசன் அவன்பெருமை தேனலர்த் தாமரை யோன்திரு மாலவர் தேர்ந்துணரார் பாநலத் தாற்கவி யாமெங்ங னேயினிப் பாடுவதே. [89]
பாடிய வண்டுறை கொன்றையி னான்படப் பாம்புயிர்ப்ப ஓடிய தீயால் உருகிய திங்களின் ஊறலொத்த தாடிய நீறது கங்கையுந் தெண்ணீர் யமுனையுமே கூடிய கோப்பொத்த தாலுமை பாகமெம் கொற்றவற்கே. [90]
கொற்றவ னேயென்றுங் கோவணத் தாயென்றும் ஆவணத்தால் நற்றவ னேயென்றும் நஞ்சுண்டி யென்றும் அஞ்சமைக்கப் பெற்றவ னேயென்றும் பிஞ்ஞக னேயென்றும் மன்மதனைச் செற்றவ னேயென்றும் நாளும் பரவுமென் சிந்தனையே. [91]
சிந்தனை செய்ய மனமமைத் தேன்செப்ப நாவமைத்தேன் வந்தனை செய்யத் தலையமைத் தேன்கை தொழவமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்மெய் அரும்பவைத்தேன் வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே. [92]
விதித்தன வாழ்நாள் பெரும்பிணி விச்சைகள் கொண்டுபண்டே கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை குங்குமக் குன்றனைய பதித்தனங் கண்டனம் குன்றம்வெண் சந்தனம் பட்டனைய மதித்தனங் கண்டனம் நெஞ்சினி என்செய்யும் வஞ்சனையே. [93]
வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத் துஞ்சும் பொழுதும் உறத்தொழு தேன்சொரி மாலருவி அஞ்சன மால்வரை வெண்பிறை கவ்வியண் ணாந்தனைய வெஞ்சின ஆனையின் ஈருரி மூடிய வீரனையே. [94]
வீரன் அயனரி, வெற்பலர் நீரெரி பொன்னெழிலார் காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை பேரொண் பதிநிறம் தாரிவர் ஊர்திவெவ் வேறென்பரால் ஆரும் அறியா வகையெங்கள் ஈசர் பரிசுகளே. [95]
பரியா தனவந்த பாவமும் பற்றும்மற் றும்பணிந்தார்க் குரியான் எனச்சொல்லி உன்னுட னாவன் எனவடியார்க் கரியான் இவனென்று காட்டுவன் என்றென் றிவையிவையே பிரியா துறையுஞ் சடையான் அடிக்கென்றும் பேசுதுமே. [96]
பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்அப் பேதைநல்லாள் காய்சின வேட்கை அரன்பா லதுவறு காற்பறவை மூசின கொன்றை முடிமே லதுமுலை மேல்முயங்கப் பூசின சாந்தம் தொழுமால் இவையொன்றும் பொய்யலவே. [97]
பொய்யா நரகம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங் குய்யா உடம்பினோ டூர்வ நடப்ப பறப்பவென்று நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர் மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே. [98]
வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல் மிகவவற்றுள் ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலதுமூப் பாண்டின அச்சம் வெகுளி அவா வழுக் காறிங்ஙனே மாண்டன சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே. [99]
மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே காய்சின ஆனை வளரும் கனக மலையருகே போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே. [100]
அன்றுவெள் ளானையின் மீதிமை யோர்சுற் றணுகுறச்செல் வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு வெள்ளி மலைஅரன்முன் சென்றெழில் ஆதி உலாஅரங் கேற்றிய சேரர்பிரான் மன்றிடை ஓதுபொன் வண்ணத் தந்தாதி வழங்கிதுவே. [101]
This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400