சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian  
பொன்வண்ணத்தந்தாதி

Back to Top
சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
11.006   பொன்வண்ணத்தந்தாதி  
பண் -   (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )

11.006 பொன்வண்ணத்தந்தாதி   (கோயில் (சிதம்பரம்) )
பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.

[1]
ஈசனைக் காணப் பலிகொடு
செல்லஎற் றேஇவளோர்
பேயனைக் காமுறு பிச்சிகொ
லாமென்று பேதையர்முன்
தாயெனை ஈர்ப்பத் தமியேன்
தளர அத் தாழ்சடையோன்
வாவெனைப் புல்லவென்றான்இமை
விண்டன வாட்கண்களே.

[2]
கண்களங் கஞ்செய்யக் கைவளை
சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண்
கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம் இவள் பேதுறும்
என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்இசை பாடநின்
றாடும் பரமனையே.

[3]
பரமனை யே பலி தேர்ந்துநஞ்
சுண்டது பன்மலர்சேர்
பிரமனை யே சிரங் கொண்டுங்
கொடுப்பது பேரருளாம்
சரமனை யேயுடம் பட்டும்
உடம்பொடு மாதிடமாம்
வரமனை யேகிளை யாகும்முக்
கண்ணுடை மாதவனே.

[4]
தவனே உலகுக்குத் தானே
முதல் தான் படைத்தவெல்லாம்
சிவனே முழுதும்என் பார்சிவ
லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி
கடலிடை நஞ்சம்உண்ட
பவனே எனச்சொல்லு வாரும்
பெறுவரிப் பாரிடமே.

[5]
இடம்மால் வலந்தான் இடப்பால்
துழாய்வலப் பாலொண்கொன்றை
வடமால் இடந்துகில் தோல்வலம்
ஆழி இடம்வலம்மான்
இடமால் கரிதால் வலஞ்சே
திவனுக் கெழில்நலஞ்சேர்
குடமால் இடம்வலங் கொக்கரை
யாம்எங்கள் கூத்தனுக்கே.

[6]
கூத்துக் கொலாமிவர் ஆடித்
திரிவது கோல்வளைகள்
பாத்துக் கொலாம்பலி தேர்வது
மேனி பவளங்கொலாம்
ஏத்துக் கொலாமிவர் ஆதரிக்
கின்ற திமையவர்தம்
ஓத்துக் கொலாமிவர் கண்ட திண்
டைச்சடை உத்தமரே.

[7]
உத்தம ராயடி யாருல
காளத் தமக்குரிய
மத்தம் அராமதி மாடம்
பதிநலஞ் சீர்மைகுன்றா
எத்தம ராயும் பணிகொள
வல்ல இறைவர்வந்தென்
சித்தம ராயக லாதுடன்
ஆடித் திரிதவரே.

[8]
திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தின்
உள்ளுந் திரிதரினும்
அரிதவர் தன்மை அறிவிப்ப
தாயினும் ஆழிநஞ்சேய்
கரிதவர் கண்டம் வெளிதவர்
சாந்தம்கண் மூன்றொடொன்றாம்
பரிதவர் தாமே அருள்செய்து
கொள்வர்தம் பல்பணியே.

[9]
பணிபதம் பாடிசை ஆடிசை
யாகப் பனிமலரால்
அணிபதங் கன்பற் கொள்அப்பனை
அத்தவற் கேயடிமை
துணிபதங் காமுறு தோலொடு
நீறுடல் தூர்த்துநல்ல
தணிபதங் காட்டிடுஞ் சஞ்சலம்
நீயென் தனிநெஞ்சமே.

[10]
நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர்
அரும்ப முகம்மலர
அஞ்செங் கரதலங் கூம்பஅட்
டாங்கம் அடிபணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல்
லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்திவைத்
தான்பெரு வானகமே.

[11]
வானகம் ஆண்டு மந் தாகினி
ஆடிநந் தாவனஞ்சூழ்
தேனக மாமலர் சூடிச்செல்
வோருஞ் சிதவல்சுற்றிக்
கானகந் தேயத் திரிந்திரப்
போருங் கனகவண்ணப்
பால்நிற நீற்றற் கடியரும்
அல்லாப் படிறருமே.

[12]
படிறா யினசொல்லிப் பாழுடல்
ஓம்பிப் பலகடைச்சென்
றிடறா தொழிதும் எழு நெஞ்ச
மேயெரி ஆடியெம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட
பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன்
னேனிவ் வுலகினுள்ளே.

[13]
உலகா ளுறுவீர் தொழுமின்விண்
ணாள்வீர் பணிமின்நித்தம்
பலகா முறுவீர் நினைமின்
பரமனொ டொன்றலுற்றீர்
நலகா மலரால் அருச்சிமின்
நாள்நர கத்துநிற்கும்
அலகா முறுவீர் அரனடி
யாரை அலைமின்களே.

[14]
அலையார் புனலனல் ஞாயி
றவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய
சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங்
கொடித்தேர் அரக்கனென்னே
கலையான் ஒருவிரல் தாங்ககில்
லான்விட்ட காரணமே.

[15]
காரணன் காமரம் பாடவோர்
காமர்அம் பூடுறத்தன்
தாரணங் காகத் தளர்கின்ற
தையலைத் தாங்குவார்யார்
போரணி வேற்கண் புனற்படம்
போர்த்தன பூஞ்சுணங்கார்
ஏரணி கொங்கையும் பொற்படம்
மூடி இருந்தனவே.

[16]
இருந்தனம் எய்தியும் நின்றுந்
திரிந்துங் கிடந்தலைந்தும்
வருந்திய வாழ்க்கை தவிர்த்திடு
போகநெஞ் சேமடவாள்
பொருந்திய பாகத்துப் புண்ணியன்
புண்ணியல் சூலத்தெம்மான்
திருந்திய போதவன் றானே
களையுநம் தீவினையே.

[17]
தீவினை யேனைநின் றைவர்
இராப்பகல் செத்தித்தின்ன
மேவின வாழ்க்கை வெறுத்தேன்
வெறுத்துவிட் டேன்வினையும்
ஒவின துள்ளந் தெளிந்தது
கள்ளங் கடிந்தடைந்தேன்
பாவின செஞ்சடை முக்கணன்
ஆரணன் பாதங்களே.

[18]
பாதம் புவனி சுடர்நய னம்பவ
னமுயிர்ப் போங்
கோதம் உடுக்கை உயர்வான்
முடிவிசும் பேயுடம்பு
வேதம் முகம் திசை தோள் மிகு
பன்மொழி கீதமென்ன
போதம் இவற்கோர் மணிநிறந்
தோற்பது பூங்கொடியே.

[19]
கொடிமேல் இடபமுங் கோவணக்
கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தின்
நீறும்ஐ வாய்அரவும்
முடிமேல் மதியும் முருகலர்
கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப்
போதும் வருகின்றவே.

[20]
வருகின்ற மூப்பொடு தீப்பிணிக்
கூற்றம்வை கற்குவைகல்
பொருகின்ற போர்க்கொன்றும் ஆற்றகில்
லேன்பொடி பூசிவந்துன்
அருகொன்றி நிற்க அருளுகண்
டாய்அழல் வாய்அரவம்
வெருகொன்ற வெண்மதி செஞ்சடை
மேல்வைத்த வேதியனே.

[21]
வேதியன் பாதம் பணிந்தேன்
பணிந்துமெய்ஞ் ஞானமென்னும்
சோதியென் பால்கொள்ள உற்றுநின்
றேற்கின்று தொட்டிதுதான்
நீதியென் றான் செல்வம் ஆவதென்
றேன் மேல் நினைப்பு வண்டேர்
ஒதிநின் போல்வகைத் தேயிரு
பாலும் ஒழித்ததுவே.

[22]
ஒழித்தேன் பிறவியை ஊர்ந்தேன்
அறுபகை ஒங்கிற்றுள்ளம்
இழித்தேன் உடம்பினை ஏலேன்
பிறரிடை இம்மனையும்
பழித்தேன் பழியே விளைக்கும்பஞ்
சேந்தியக் குஞ்சரமும்
தெழித்தேன் சிவனடி சேர்ந்தேன்
இனிமிகத் தெள்ளியனே.

[23]
தெள்ளிய மாந்தரைச் சேர்ந்திலன்
தீங்கவி பாடலுற்றேன்
ஒள்ளிய சொல்லும் பொருளும்
பெறேன்உரைத் தாருரைத்த
கள்ளிய புக்காற் கவிகளொட் டார்
கடல் நஞ்சயின்றாய்
கொள்ளிய வல்லகண் டாய் புன்சொல்
ஆயினுங் கொண்டருளே.

[24]
அருளால் வருநஞ்சம் உண்டுநின்
றாயை அமரர்குழாம்
பொருளார் கவிசொல்ல யானும்புன்
சொற்கள் புணர்க்கலுற்றேன்
இருளா சறவெழில் மாமதி
தோன்றவும் ஏன்றதென்ன
வெருளா தெதிர்சென்று மின்மினி
தானும் விரிகின்றதே.

[25]
விரிகின்ற ஞாயிறு போன்ற
மேனியஞ் ஞாயிறுசூழ்ந்
தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது
செஞ்சடை அச்சடைக்கீழ்ச்
சரிகின்ற காரிருள் போன்றது
கண்டம் காரிருட்கீழ்ப்
புரிகின்ற வெண்முகில் போன்றுள
தாலெந்தை ஒண்பொடியே.

[26]
பொடிக்கின் றிலமுலை போந்தில
பல்சொற் பொருள்தெரியா
முடிக்கின் றிலகுழல் ஆயினும்
கேண்மின்கள் மூரிவெள்ளம்
குடிக்கொண்ட செஞ்சடைக் கொண்டலங்
கண்டன்மெய்க் கொண்டணிந்த
கடிக்கொன்றை நாறுகின் றாள்அறி
யேன்பிறர் கட்டுரையே.

[27]
உரைவளர் நான்மறை ஓதி
உலகம் எலாந் திரியும்
விரைவளர் கொன்றை மருவிய
மார்பன் விரிசடைமேல்
திரைவளர் கங்கை நுரைவளர்
தீர்த்தம் செறியச்செய்த
கரைவளர் வொத்துள தால்சிர
மாலையெம் கண்டனுக்கே.

[28]
கண்டங் கரியன் கரிஈர்
உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான்
சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர்
பிரமன் சிரமரிந்த
புண்தங் கயிலன் பயிலார
மார்பனெம் புண்ணியனே.

[29]
புண்ணியன் புண்ணியல் வேலையன்
வேலைய நஞ்சனங்கக்
கண்ணியன் கண்ணியல் நெற்றியன்
காரணன் காரியங்கும்
விண்ணியன் விண்ணியல் பாணியன்
பாணி கொளவுமையாள்
பண்ணியன் பண்ணியல் பாடல
நாடற் பசுபதியே.

[30]
பதியார் பலிக்கென்று வந்தார்
ஒருவர்க்குப் பாவைநல்லீர்
கதியார் விடைஉண்டு கண்மூன்
றுளகறைக் கண்டமுண்டு
கொதியார் மழுவுண்டு கொக்கரை
உண் டிறை கூத்துமுண்டு
மதியார் சடையுள மாலுள
தீவது மங்கையர்க்கே.

[31]
மங்கைகொங் கைத்தடத் திங்குமக்
குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் குந்நெகச் சங்கமங்
கைத்தலத் துங்கவர்வான்
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங்
கண்ணர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங்
கும்முடிப் பண்டங்கனே.

[32]
பண்டங்கன் வந்து பலிதாவென்
றான்பக லோற்கிடென்றேன்
அண்டங் கடந்தவன் அன்னமென்
றான்அயன் ஊர்தியென்றேன்
கொண்டிங் குன்னையம்பெய் என்றான்
கொடித்தேர் அனங்கனென்றேன்
உண்டிற் கமைந்ததென் றாற்கது
சொல்ல உணர்வுற்றதே.

[33]
உற்றடி யாருல காளவோர்
ஊணும் உறக்குமின்றிப்
பெற்றம தாவதென் றேறும் பிரான்
பெரு வேல்நெடுங்கண்
சிற்றடி யாய்வெண்பற் செவ்வாய்
இவள்சிர மாலைக்கென்றும்
இற்றிடை யாம்படி யாகவென்
னுக்கு மெலிக்கின்றதே.

[34]
மெலிக்கின்ற வெந்தீ வெயில்வாய்
இழுதழல் வாய்மெழுகு
தலிக்கின்ற காமங் கரதலம்
மெல்லி துறக்கம்வெங்கூற்
றொலிக்கின்ற நீருறு தீயொளி
யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை
சூடிய பல்லுயிரே.

[35]
பல்லுயிர் பாகம் உடல் தலை
தோல்பக லோன்மறல்பெண்
வில்லியோர் வேதியன் வேழம்
நிரையே பறித்துதைத்துப்
புல்லியுஞ் சுட்டும் அறுத்தும்
உரித்துங்கொண் டான்புகழே
சொல்லியும் பாடியும் ஏத்தக்
கெடும்நங்கள் சூழ்துயரே.

[36]
துயருந் தொழுமழும் சோரும்
துகிலுங் கலையுஞ்செல்லப்
பெயரும் பிதற்றும் நகும்வெய்
துயிர்க்கும் பெரும்பணிகூர்ந்
தயரும் அமர்விக்கும் மூரி
நிமிர்க்குமந்தோ இங்ஙனே
மயரும் மறைக்காட் டிறையினுக்
காட்பட்ட வாணுதலே.

[37]
வாணுதற் கெண்ணம்நன் றன்று
வளர்சடை எந்தைவந்தால்
நாணுதற் கெண்ணாள் பலிகொடு
சென்று நகும்நயந்து
பேணுதற் கெண்ணும் பிரமன்
திருமால் அவர்க்கரிய
தாணுவுக் கென்னோ இராப்பகல்
நைந்திவள் தாழ்கின்றதே.

[38]
தாழுஞ் சடைசடை மேலது
கங்கைஅக் கங்கைநங்கை
வாழுஞ் சடைசடை மேலது
திங்களத் திங்கட்பிள்ளை
போழுஞ் சடை சடை மேலது
பொங்கர வவ்வரவம்
வாழுஞ் சடைசடை மேலது
கொன்றையெம் மாமுனிக்கே.

[39]
முனியே முருகலர் கொன்றையி
னாயென்னை மூப்பொழித்த
கனியே கழலடி அல்லாற்
களைகண்மற் றொன்றுமிலேன்
இனியேல் இருந்தவஞ் செய்யேன்
திருந்தவஞ் சேநினைந்து
தனியேன் படுகின்ற சங்கடம்
ஆர்க்கினிச் சாற்றுவனே.

[40]
சாற்றுவன் கோயில் தலையும்
மனமுந் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந்
தாற்றியஞ் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந் தென்மனத்
தானென் றெழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின
வேயினிச் சொல்லுவனே.

[41]
சொல்லா தனகொழு நாவல்ல
சோதியுட் சோதிதன்பேர்
செல்லாச் செவிமரம் தேறித்
தொழாதகை மண் திணிந்த
கல்லாம் நினையா மனம் வணங்
காத்தலை யும்பொறையும்
அல்லா அவயவந் தானும்
மனிதர்க் கசேதனமே.

[42]
தனக்குன்றம் மாவையம் சங்கரன்
தன்னருள் அன்றிப்பெற்றால்
மனக்கென்றும் நஞ்சிற் கடையா
நினைவன் மதுவிரியும்
புனக்கொன்றை யானரு ளாற்புழு
வாகிப் பிறந்திடினும்
எனக்கென்றும் வானவர் பொன்னுல
கோடொக்க எண்ணுவனே.

[43]
எண்ணம் இறையே பிழைக்குங்
கொலாமிமை யோரிறைஞ்சும்
தண்ணம் பிறைசடைச் சங்கரன்
சங்கக் குழையன்வந்தென்
உண்ணன் குறைவ தறிந்தும்
ஒளிமா நிறங்கவர்வான்
கண்ணும் உறங்கா திராப்பகல்
எய்கின்ற காமனுக்கே.

[44]
காமனை முன்செற்ற தென்றாள்
அவளிவள் காலனென்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற
தென்றுதன் கையெறிந்தாள்
நாம்முனஞ் செற்றதன் றாரையென்
றேற்கிரு வர்க்குமஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அற்றெனக்
கிற்றிலர் அந்தணரே.

[45]
அந்தண ராமிவர் ஆரூ
ருறைவதென் றேனதுவே
சந்தணை தோளியென் றார்தலை
யாயசலவர் என்றேன்
பந்தணை கையாய் அதுவுமுண்
டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமினென்
றேன்துடி கொட்டினரே.

[46]
கொட்டும் சிலபல சூழநின்
ரார்க்கும்குப் புற்றெழுந்து
நட்ட மறியும் கிரீடிக்கும்
பாடும் நகும்வெருட்டும்
வட்டம் வருமருஞ் சாரணை
செல்லும் மலர்தயங்கும்
புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக்
காட்டான் பூதங்களே.

[47]
பூதப் படையுடைப் புண்ணிய
ரேபுறஞ்சொற்கள் நும்மேல்
ஏதப் படவெழு கின்றன
வாலிளை யாளொடும்மைக்
காதற் படுப்பான் கணைதொட்ட
காமனைக் கண்மலராற்
சேதப் படுத்திட்ட காரணம்
நீரிறை செப்புமினே.

[48]
செப்பன கொங்கைக்குத் தேமலர்க்
கொன்றை நிறம்பணித்தான்
மைப்புரை கண்ணுக்கு வார்புனற்
கங்கைவைத் தான்மனத்துக்
கொப்பன இல்லா ஒளிகிளர்
உன்மத் தமும்அமைத்தான்
அப்பனை அம்மனை நீயென்
பெறாதுநின் றார்க்கின்றதே.

[49]
ஆர்க்கின்ற நீரும் அனலும்
மதியும்ஐ வாயரவும்
ஓர்க்கின்ற யோகும் உமையும்
உருவும் அருவும்வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும்
பகலும் இரவுமெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்குடன்
ஆகிக் கலந்தனவே.
[50]
கலந்தனக் கென்பலர் கட்டவிழ்
வார்கொன்றை கச்சரவார்
சலந்தனக் கண்ணிய கானகம்
ஆடியோர் சாணகமும்
நிலந்தனக் கில்லா அகதியன்
ஆகிய நீலகண்டத்து
அலந்தலைக் கென்னே அலந்தலை
யாகி அழிகின்றதே.

[51]
அழிகின்ற தாருயிர் ஆகின்ற
தாகுலம் ஏறிடும்மால்
இழிகின்ற சங்கம் இருந்த
முலைமேற் கிடந்தனபீர்
பொழிகின்ற கண்ணீர் புலர்ந்தது
வாய்கலை போனவந்தார்
மொழிகின்ற தென்னினி நான்மறை
முக்கண் முறைவனுக்கே.

[52]
முறைவனை மூப்புக்கும் நான்மறைக்
கும்முதல் ஏழ்கடலந்
துறைவனைச் சூழ்கயி லாயச்
சிலம்பனைத் தொன்மைகுன்றா
இறைவனை எண்குணத் தீசனை ஏத்தினர்
சித்தந் தம்பால்
உறைவனைப் பாம்பனை யாம்பின்னை
என்சொல்லி ஓதுவதே.

[53]
ஓதவன் நாமம் உரையவன்
பல்குணம் உன்னைவிட்டேன்
போதவன் பின்னே பொருந்தவன்
வாழ்க்கை திருந்தச்சென்று
மாதவ மாகிடு மாதவ
மாளவர் புன்சடையான்
யாதவன் சொன்னான் அதுகொண்
டொழியினி ஆரணங்கே.

[54]
ஆரணங் கின்முகம் ஐங்கணை
யானகம் அவ்வகத்தில்
தோரணந் தோள்அவன் தேரகல்
அல்குல்தொன் மைக்கண்வந்த
பூரண கும்பம் முலையிவை
காணப் புரிசடையெம்
காரணன் தாள்தொழும் அன்போ
பகையோ கருதியதே.

[55]
கருதிய தொன்றில்லை ஆயினுங்
கேண்மின்கள் காரிகையாள்
ஒருதின மும்உள ளாகவொட்
டாதொடுங் காரொடுங்கப்
பொருதநன் மால்விடைப் புண்ணியன்
பொங்கிளங் கொன்றையின்னே
தருதிர்நன் றாயிடும் தாரா
விடிற்கொல்லுந் தாழிருளே.

[56]
இருளார் மிடற்றால் இராப்பகல்
தன்னால் வரைமரையால்
பொருளால் கமழ்கொன்றை யால்முல்லை
புற்றர வாடுதலால்
தெருளார் மதிவிசும் பால்பௌவந்
தெண்புனல் தாங்குதலால்
அருளாற் பலபல வண்ணமு
மாஅரன் ஆயினனே.

[57]
ஆயின அந்தணர் வாய்மை
அரைக்கலை கைவளைகள்
போயின வாள்நிகர் கண்ணுறு
மைந்நீர் முலையிடையே
பாயின வேள்கைக் கரபத்
திரத்துக்குச் சூத்திரம்போல்
ஆயின பல்சடை யார்க்கன்பு
பட்டவெம் ஆயிழைக்கே.

[58]
இழையார் வனமுலை வீங்கி
இடையிறு கின்றதுஇற்றால்
பிழையாள் நமக்கிவை கட்டுண்க
என்பது பேச்சுக்கொலாம்
கழையார் கழுக்குன்ற வாணனைக்
கண்டனைக் காதலித்தாள்
குழையார் செவியொடு கோலக்
கயற்கண்கள் கூடியவே.

[59]
கூடிய தன்னிடத் தானுமை
யாளிடத் தானைஐயா
றீடிய பல்சடை மேற்றெரி
வண்ணம் எனப்பணிமின்
பாடிய நான்மறை பாய்ந்து
கூற்றைப் படர்புரஞ்சுட்
டாடிய நீறுசெஞ் சாந்திவை
யாமெம் அயனெனவே.

[60]
அயமே பலியிங்கு மாடுள
தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும் பசுபதி
ஏறெம்மைப் பாய்ந்திடுமால்
புயமேய் குழலியர் புண்ணியர்
போமின் இரத்தல்பொல்லா
நயமே மொழியினும் நக்காம
மாவும்மை நாணுதுமே.

[61]
நாணா நடக்க நலத்தார்க்
கிடையில்லை நாமெழுக
ஏணார் இருந்தமி ழார்மற
வேனுந் நினைமினென்றும்
பூணார் முலையீர் நிருத்தன்
புரிசடை எந்தைவந்தால்
காணா விடேன்கண் டிரவா
தொழியேன் கடிமலரே.

[62]
கடிமலர்க் கொன்றை தரினும்புல்
லேன்கலை சாரலொட்டேன்
முடிமலர் தீண்டின் முனிவன்
முலைதொடு மேற்கெடுவன்
அடிமலர் வானவர் ஏத்தநின்
றாய்க் கழ கல்லவென்பேன்
தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு
வாணை தொடங்குவனே.

[63]
தொடங்கிய வாழ்க்கையை வாளா
துறப்பர் துறந்தவரே
அடங்கிய வேட்கை அரன்பால்
இலர்அறு காற்பறவை
முடங்கிய செஞ்சடை முக்கண
னார்க்கன்றி இங்குமன்றிக்
கிடங்கின்றி பட்ட கராவனை
யார்பல கேவலரே.

[64]
வலந்தான் கழலிடம் பாடகம்
பாம்பு வலமிடமே
கலந்தான் வலம்நீ றிடம்சாந்து
எரிவலம் பந்திடமென்பு
அலர்ந்தார் வலமிடம் ஆடகம்
வேல்வலம் ஆழியிடம்
சலந்தாழ் சடைவலம் தண்ணங்
குழலிடம் சங்கரற்கே.

[65]
சங்கரன் சங்கக் குழையன்
சரணார விந்தந்தன்னை
அங்கரங் கூப்பித் தொழுதாட்
படுமின் தொண் டீர்நமனார்
கிங்கரர் தாம்செய்யும் கீழா
யினமிறை கேட்டலுமே
இங்கரம் ஆயிரம் ஈரவென்
நெஞ்சம் எரிகின்றதே.

[66]
எரிகின்ற தீயொத் துளசடை
ஈசற்கத் தீக்கிமையோர்
சொரிகின்ற பாற்கடல் போன்றது
சூழ்புனல் அப்புனலிற்
சரிகின்ற திங்களோர் தோணியொக்
கின்றகத் தோணியுய்ப்பான்
தெரிகின்ற திண்கழை போன்றுள
தாலத் திறலரவே.

[67]
அரவம் உயிர்ப்ப அழலும்
அங்கங்கை வளாய்க்குளிரும்
குரவங் குழலுமை ஊடற்கு
நைந்துரு கும்அடைந்தார்
பரவும் புகழண்ணல் தீண்டலும்
பார்வா னவைவிளக்கும்
விரவும் இடரின்பம் எம்மிறை
சூடிய வெண்பிறையே.

[68]
பிறைத்துண்டஞ் சூடலுற் றோபிச்சை
கொண்டனல் ஆடலுற்றோ
மறைக்கண்டம் பாடலுற் றோவென்பும்
நீறும் மருவலுற்றோ
கறைக்கண்டம் புல்லலுற் றோகடு
வாயர வாடலுற்றோ
குறைக்கொண் டிவளரன் பின்செல்வ
தென்னுக்குக் கூறுமினே.

[69]
கூறுமின் ஈசனைச் செய்ம்மின்குற்
றேவல் குளிர்மின்கண்கள்
தேறுமின் சித்தம் தெளிமின்
சிவனைச் செறுமின்செற்றம்
ஆறுமின் வேட்கை அறுமின்
அவலம் இவைநெரியா
ஏறுமின் வானத் திருமின்
விருந்தாய் இமையவர்க்கே.

[70]
இமையோர் கொணர்ந்திங் கிழித்திட
நீர்மைகெட் டேந்தல்பின்போய்
அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த
சலமக ளாயணைந்தே
எமையா ளுடையான் தலை
மகளாவங் கிருப்பவென்னே
உமையா ளவள்கீழ் உறைவிடம்
பெற்றோ உறைகின்றதே.

[71]
உறைகின் றனரைவர் ஒன்பது
வாயிலோர் மூன்றுளவால்
மறைகின்ற என்பு நரம்போ
டிறைச்சி உதிரம்மச்சை
பறைகின்ற தோல்போர் குரம்பை
பயனில்லை போயடைமின்
அறைகின்ற தெண்புனல் செஞ்சடைக்
கொண்டோன் மலரடிக்கே.

[72]
அடிக்கண்ணி கைதொழு தார்க்ககன்
ஞாலங் கொடுத்தடிநாய்
வடிக்கண்ணி நின்னைத் தொழவளை
கொண்டனை வண்டுண்கொன்றைக்
கடிக்கண்ணி யாயெமக்கோரூர்
இரண்டகங் காட்டினையால்
கொடிக்கண்ணி மேல்நல்ல கொல்லே
றுயர்த்த குணக்குன்றமே.

[73]
குன்றெடுத் தான்செவி கண்வாய்
சிரங்கள் நெரிந்தலற
அன்றடர்த் தற்றுகச் செற்றவன்
அற்றவர்க் கற்றசிவன்
மன்றிடைத் தோன்றிய நெல்லிக்
கனிநிற்ப மானுடர்போய்
ஒன்றெடுத் தோதிப் புகுவர் நரகத்
துறுகுழியே.

[74]
குழிகண் கொடுநடைக் கூன்பற்
கவட்டடி நெட்டிடையூன்
உழுவைத் தழைசெவித் தோல்முலைச்
சூறை மயிர்ப்பகுவாய்த்
தெழிகட் டிரைகுரல் தேம்பல்
வயிற்றுத் திருக்குவிரற்
கழுதுக் குறைவிடம் போல் கண்டன்
ஆடும் கடியரங்கே.

[75]
அரம்கா மணியன்றில் தென்றலோர்
கூற்றம் மதியம்அந்தீச்
சரம்காமன் எய்யஞ்சு சந்துட் பகையால்
இவள் தளர்ந்தாள்
இரங்கா மனத்தவர் இல்லை
இரங்கான் இமையவர்தம்
சிரம்கா முறுவான் எலும்புகொள்
வானென்றன் தேமொழிக்கே.

[76]
மொழியக்கண் டான்பழி மூளக்கண்
டான்பிணி முன்கைச்சங்கம்
அழியக்கண் டானன்றில் ஈரக்கண்
டான்தென்றல் என்னுயிர்மேற்
கழியக்கண் டான்துயர் கூரக்கண்
டான்துகில் சூழ்கலையும்
கழியக்கண் டான்தில்லைக் கண்ணுத
லான்கண்ட கள்ளங்களே.

[77]
கள்ள வளாகங் கடிந்தடி
மைப்படக் கற்றவர்தம்
உள்ள வளாகத் துறுகின்ற
உத்தமன் நீள்முடிமேல்
வெள்ள வளாகத்து வெண்ணுரை சூடி
வியன்பிறையைக்
கொள்ள வளாய்கின்ற பாம்பொன் றுளது
குறிக்கொண்மினே.

[78]
குறிக்கொண் டிவள்பெய்த கோல்வளை
யேவந்து கோளிழைத்தீர்
வெறிக்கொண்ட வெள்ளிலம் போதோ
எலும்போ விரிசடைமேல்
உறைக்கொன்றை யோவுடைத் தோலோ
பொடியோ உடைகலனோ
கறைக்கண்ட ரேநுமக் கென்னோ
சிறுமி கடவியதே.

[79]
கடவிய தொன்றில்லை ஆயினும்
கேண்மின்கள் காரிகையாள்
மடவிய வாறுகண் டாம்பிறை
வார்சடை எந்தைவந்தாற்
கிடவிய நெஞ்சம் இடங்கொடுத்
தாட்கவ லங்கொடுத்தான்
தடவிய கொம்பதன் தாள்மேல்
இருந்து தறிக்குறுமே.

[80]
தறித்தாய் அயன்தலை சாய்த்தாய்
சலந்தர னைத்தழலாப்
பொறித்தாய் அனங்கனைச் சுட்டாய்
புரம்புன லுஞ்சடைமேற்
செறித்தாய்க் கிவைபுகழ் ஆகின்ற
கண்டிவள் சில்வளையும்
பறித்தாய்க் கிதுபழி ஆகுங்கொ
லாமென்று பாவிப்பனே.

[81]
பாவிக்கும் பண்டையள் அல்லள்
பரிசறி யாள்சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும்
அகம்நெக அங்கமெங்கும்
காவிக்கண் சோரும்பொச் சாப்புங்
கறைமிடற் றானைக் கண்ணில்
தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல்
லோதிக்குச் சந்தித்தவே.

[82]
சந்தித்த கூற்றுக்குக் கூற்றாம்
பிணிக்குத் தனிமருந்தாம்
சிந்திக்கிற் சிந்தா மணியாகித்
தித்தித் தமுதமுமாம்
வந்திக்கில் வந்தென்னை மால்செய்யும்
வானோர் வணங்கநின்ற
அந்திக்கண் ஆடியி னானடி
யார்களுக் காவனவே.

[83]
ஆவன யாரே அழிக்கவல்
லாரமை யாவுலகில்
போவன யாரே பொதியகிற்
புராபுரம் மூன்றெரித்த
தேவனைத் தில்லைச் சிவனைத்
திருந்தடி கைதொழுது
தீவினை யேனிழந் தேன்கலை
யோடு செறிவளையே.

[84]
செறிவளை யாய்நீ வரையல்
குலநலம் கல்விமெய்யாம்
இறையவன் தாமரைச் சேவடிப்
போதென்றெல் லோருமேத்தும்
நிறையுடை நெஞ்சிது வேண்டிற்று
வேண்டிய நீசர்தம்பால்
கறைவளர் கண்டனைக் காணப்
பெரிதுங் கலங்கியதே.

[85]
கலங்கின மால்கடல் வீழ்ந்தன
கார்வரை ஆழ்ந்ததுமண்
மலங்கின நாகம் மருண்டன
பல்கணம் வானங்கைபோய்
இலங்கின மின்னொடு நீண்ட
சடைஇமை யோர்அவிந்தார்
அலங்கல்நன் மாநடம் ஆர்க்கினி
ஆடுவ தெம்மிறையே.

[86]
எம்மிறை வன்னிமை யோர்தலை
வன்உமை யாள்கணவன்
மும்முறை யாலும் வணங்கப்
படுகின்ற முக்கண்நக்கற்
கெம்முறை யாளிவள் என்பிழைத்
தாட்கிறை என்பிழைத்தான்
இம்முறை யாலே கவரக்
கருதிற் றெழிற்கலையே.

[87]
கலைதலைச் சூலம் மழுக்கனல்
கண்டைகட் டங்கம்கொடி
சிலையிவை ஏந்திய எண்டோட்
சிவற்கு மனஞ்சொல்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய்
தார்நின்ற மேருவென்னும்
மலைபிழை யாரென்ப ராலறிந்
தோர் இந்த மாநிலத்தே.

[88]
மாநிலத் தோர்கட்குத் தேவர்
அனையவத் தேவரெல்லாம்
ஆநலத் தாற்றொழும் அஞ்சடை
ஈசன் அவன்பெருமை
தேனலர்த் தாமரை யோன்திரு
மாலவர் தேர்ந்துணரார்
பாநலத் தாற்கவி யாமெங்ங
னேயினிப் பாடுவதே.

[89]
பாடிய வண்டுறை கொன்றையி
னான்படப் பாம்புயிர்ப்ப
ஓடிய தீயால் உருகிய
திங்களின் ஊறலொத்த
தாடிய நீறது கங்கையுந்
தெண்ணீர் யமுனையுமே
கூடிய கோப்பொத்த தாலுமை
பாகமெம் கொற்றவற்கே.

[90]
கொற்றவ னேயென்றுங் கோவணத்
தாயென்றும் ஆவணத்தால்
நற்றவ னேயென்றும் நஞ்சுண்டி
யென்றும் அஞ்சமைக்கப்
பெற்றவ னேயென்றும் பிஞ்ஞக
னேயென்றும் மன்மதனைச்
செற்றவ னேயென்றும் நாளும்
பரவுமென் சிந்தனையே.

[91]
சிந்தனை செய்ய மனமமைத்
தேன்செப்ப நாவமைத்தேன்
வந்தனை செய்யத் தலையமைத்
தேன்கை தொழவமைத்தேன்
பந்தனை செய்வதற் கன்பமைத்
தேன்மெய் அரும்பவைத்தேன்
வெந்தவெண் ணீறணி ஈசற்
கிவையான் விதித்தனவே.

[92]
விதித்தன வாழ்நாள் பெரும்பிணி
விச்சைகள் கொண்டுபண்டே
கொதிப்பினில் ஒன்றும் குறைவில்லை
குங்குமக் குன்றனைய
பதித்தனங் கண்டனம் குன்றம்வெண்
சந்தனம் பட்டனைய
மதித்தனங் கண்டனம் நெஞ்சினி
என்செய்யும் வஞ்சனையே.

[93]
வஞ்சனை யாலே வரிவளை
கொண்டுள்ள மால்பனிப்பத்
துஞ்சும் பொழுதும் உறத்தொழு
தேன்சொரி மாலருவி
அஞ்சன மால்வரை வெண்பிறை
கவ்வியண் ணாந்தனைய
வெஞ்சின ஆனையின் ஈருரி
மூடிய வீரனையே.

[94]
வீரன் அயனரி, வெற்பலர்
நீரெரி பொன்னெழிலார்
காரொண் கடுக்கை கமலம்
துழாய்விடை தொல்பறவை
பேரொண் பதிநிறம் தாரிவர்
ஊர்திவெவ் வேறென்பரால்
ஆரும் அறியா வகையெங்கள்
ஈசர் பரிசுகளே.

[95]
பரியா தனவந்த பாவமும்
பற்றும்மற் றும்பணிந்தார்க்
குரியான் எனச்சொல்லி உன்னுட
னாவன் எனவடியார்க்
கரியான் இவனென்று காட்டுவன்
என்றென் றிவையிவையே
பிரியா துறையுஞ் சடையான்
அடிக்கென்றும் பேசுதுமே.

[96]
பேசுவ தெல்லாம் அரன்திரு
நாமம்அப் பேதைநல்லாள்
காய்சின வேட்கை அரன்பா
லதுவறு காற்பறவை
மூசின கொன்றை முடிமே
லதுமுலை மேல்முயங்கப்
பூசின சாந்தம் தொழுமால்
இவையொன்றும் பொய்யலவே.

[97]
பொய்யா நரகம் புகினுந்
துறக்கம் புகினும்புக்கிங்
குய்யா உடம்பினோ டூர்வ
நடப்ப பறப்பவென்று
நையா விளியினும் நானிலம்
ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற
வாவரம் வேண்டுவனே.

[98]
வேண்டிய நாள்களிற் பாதியும்
கங்குல் மிகவவற்றுள்
ஈண்டிய வெந்நோய் முதலது
பிள்ளைமை மேலதுமூப்
பாண்டின அச்சம் வெகுளி
அவா வழுக் காறிங்ஙனே
மாண்டன சேர்தும் வளர்புன்
சடைமுக்கண் மாயனையே.

[99]
மாயன்நன் மாமணி கண்டன்
வளர்சடை யாற்கடிமை
ஆயின தொண்டர் துறக்கம்
பெறுவது சொல்லுடைத்தே
காய்சின ஆனை வளரும்
கனக மலையருகே
போயின காக்கையும் அன்றே
படைத்தது பொன்வண்ணமே.

[100]
அன்றுவெள் ளானையின் மீதிமை
யோர்சுற் றணுகுறச்செல்
வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு
வெள்ளி மலைஅரன்முன்
சென்றெழில் ஆதி உலாஅரங்
கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத்
தந்தாதி வழங்கிதுவே.

[101]

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai nool